Thursday 29 January 2015

வள்ளியூர் விவேகானந்த கேந்திர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் குடியரசு தினவிழா

       வள்ளியூர் விவேகானந்த கேந்திர மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் 26.01.2015 அன்று காலை 9.30 மணி அளவில் குடியரசு தின விழா நிகழ்ச்சி மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டது. விழாவின் தலைவராக ளு.விநாயகம், மோட்டார் வாகன ஆய்வாளர், வள்ளியூர்., அவர்கள் வருகை தந்து சிறப்பித்தார்கள். விவேகானந்த கேந்திர கிராம முன்னேற்றத் திட்ட மாநில பொறுப்பாளர் திருமதி.ஜானகி புஷ்பம் வருகை தந்திருந்தார்கள். சரியாக 9.30 மணிக்கு 66-வது குடியரசு தின தேசியக்கொடி விழா தலைவர் அவர்களால் ஏற்றபட்டது. தொடர்ந்து திரு.விநாயகம் அவர்கள் மாணவர்களிடையே சிறப்புரை ஆற்றினார். அவரது உரையில் மாணவர்களுக்கு அறிவு சார்ந்த பல அறிவுரைகளை வழங்கினார். மேலும் நம் நாடு எல்லாத் துறைகளிலும் முன்னேறியுள்ளதாகவும் அன்பு ஒன்றே அனைத்தையும் வழிநடத்தும் எனவும் உலகில் உள்ள அனைவருக்கும் நன்றி பாராட்டக் கடமைபட்டவர்கள் நாம் எனவும் கூறி தனது உரையினை நிறைவு செய்தார். அடுத்ததாக திருமதி.ஜானகி புஷ்பம் சுவாமி விவேகானந்தரின் கூற்றை மேற்கோள் காட்டி நாடு முன்னேறுவது இளைஞர்கள் கையில் தான் உள்ளது என உரையாற்றினார். அடுத்ததாக பள்ளி விளையாட்டுப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியின் இறுதியில் மாணவர்களுக்கும் பெற்றோர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டு இந்நிகழ்ச்சி நிறைவடைந்தது. மேலும் பள்ளித் தாளாளர் திரு. ளு.மு.சுப்பிரமணியன் மற்றும் பள்ளி முதல்வர் திருமதி சு.ஆண்டாள் போன்றவர்கள் விழாவிற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தனர்.  


 முன்னதாக 24-01-2015 அன்று குடியரசுதின விழாவை முன்னிட்டு பள்ளியில் மாபெரும் விளையாட்டு விழா நடைபெற்றது. விளையாட்டு விழாவிற்கு வள்ளியூர் முத்து எலக்டிரிக்கல்ஸ் உரிமையாளர் திரு.ஆ.நடேசன் அவர்கள் தலைமைத்தாங்கி பள்ளி மைதானத்தில் மாணவர்களால் கொண்டுவரப்பட்ட ஒலிம்பிக் தீபத்தையும், ஒலிம்பிக் கொடியும் ஏற்றி விளையாட்டுப் போட்டிகளை தொடங்கிவைத்தார். மேலும் மாணவ, மாணவியர்களின் தகுதிக்கேற்ப பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஓட்டபந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல் முதலிய விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன என்பது குறிப்பிடத்தக்கது.

2 comments: